மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக துப்பாக்கிதாரி ‘மாட்டியா’ கட்டுநாயக்கவில் கைது!
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதான இந்த சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு அறிவித்தலும் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து, ‘பஸ்பொட்டா’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகளாகும்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
