நீர்கொழும்பு சிறைச்சாலையில் 05 மற்றும் 06ஆகிய இரு தினங்களாக இடம்பெற்ற பாரிய வன்முறைச் சம்பவங்கள் குறித்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து கூட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் தற்போது பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 19 கைதிகளும், 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவர்.
மேலும், இக்கலவரத்தின் போது 23 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் உட்பட 77 பேர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுள் ஆபத்தான நிலையில் உள்ள 18 பேர் மேலதிக அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட சதி: சிசிடிவி அமைப்புகள் முற்றாக அழிப்பு
சிறைச்சாலையின் அன்றாடச் செயற்பாடுகளை முழுமையாக முடக்குவதே இந்த வன்முறையின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கலவரத்தின் போது சிறைச்சாலையில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதிநவீன உடல் பரிசோதனை இயந்திரங்கள் என்பன கைதிகளினால் திட்டமிட்ட முறையில் முற்றாக அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.
700 கைதிகள் அவசரமாக இடமாற்றம்
சிறைச்சாலையின் பாதுகாப்பை மீள உறுதிப்படுத்தும் அவசர நடவடிக்கையாக, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கமைய அகுணுகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இவர்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை, இந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருந்து நேரடியாகக் காரணமானதாக அடையாளம் காணப்பட்ட முக்கிய கைதிகள் சிலர், அகுணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை ஆகிய அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலைகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மோசமடைந்துள்ள சிறைச்சாலையின் தற்போதைய நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், மேலதிக அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய மேலதிகப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். CID மற்றும் CCD அதிகாரிகளின் விரிவான கூட்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
