பிபிலை கல்வி வலயத்திற்கு புதிய கல்வி பணிப்பாளர் பொறுப்பேற்பு
பிபிலை கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளராக திருமதி எம்.ஏ. ஸரீனா பேகம் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அலுவலக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் அனைவரும் இணைந்து புதிய கல்வி பணிப்பாளரை உளமாற வரவேற்றனர்.
திருமதி ஸரீனா பேகம் முன்னதாக பிபிலை மற்றும் பசறை கல்வி வலயங்களில் கல்வி பணிப்பாளராகவும், மேலும் ஊவா மாகாண கல்வி அமைச்சின் பிரதி கல்வி பணிப்பாளராகவும் சிறப்பாக சேவையாற்றிய அனுபவமிக்க கல்வி நிர்வாகியாக விளங்குகிறார்.
துணிச்சலுடனும் திறமையுடனும் செயலாற்றும் பெண் தலைமைத்துவத்தின் முன்னுதாரணமாக இவர் பரவலாக பாராட்டப்படுகிறார். கல்வித்துறையில் இவரது நேர்த்தியான மற்றும் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு NDB வங்கி மற்றும் NewsFirst இணைந்து வழங்கிய “ஸ்ரீலங்கா வனிதாபிமான விருது”வில் கல்வித்துறையில் சிறந்து விளங்கிய முதன்மை மகளிருக்கான விருதை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பொறுப்பில் கல்வி பணிப்பாளர் திருமதி ஸரீனா பேகம் சிறப்பாக செயலாற்றி பிபிலை கல்வி வலயத்தின் முன்னேற்றத்திற்கு பங்காற்றுவார் என கல்வி வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
– நடராஜா மலர்வேந்தன்
