மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் உளுவடுகே மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, சமீபத்தில் இராகலை (செயின்ட் லியோனார்ட்ஸ்) தோட்டத்தில் வசித்து வந்த ஆறு குடும்பங்கள், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு முழுமையான விபரங்களை முன்வைக்காமல் பெறப்பட்டதாகவும், குறித்த ஆறு குடும்பங்களும் மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர் குடும்பங்கள் என்பதாலும், அவர்களை அக்குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
எனவே, இவ்விவகாரம் தொடர்பாக மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனம் உடனடியாக மேன்முறையீடு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடியிருப்பு உரிமையை மீண்டும் உறுதிப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் உளுவடுகே செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.
மேலும், குறித்த ஆறு குடும்பங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்துடன் இணைந்து மேன்முறையீடு செய்து, அவர்களுக்கான நீதி கிடைக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
