நள்ளிரவில் பாரிய இரத்தினக்கல் அகழ்வு: தேயிலைச் செடிகளை அழித்து அட்டகாசம்; போர்ட்ரீயிலும் 200 பேர் முகாமிட்டுள்ளதால் சுற்றாடல் ஆபத்து!
ஹட்டன் விசேட நிருபர்
நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள நோர்வூட் NC தேயிலைத் தோட்டப் பிரிவிலும், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் விநியோகிக்கும் கெசல்கமு ஓயாவிற்கு அருகிலுள்ள போர்ட்ரீ (Portree) தோட்டத்திலும் இரவு நேரங்களில் மிகப்பாரிய அளவில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் பாரிய சுற்றாடல் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (15) நள்ளிரவு, இந்தச் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வுக் குழுவினர் NC தேயிலைத் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு பயிரிடப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தேயிலைச் செடிகளை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, அவற்றின் அடியில் இருந்த இரத்தினக்கல் படிமங்களைத் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இக்கும்பலினால் விளைநிலங்களில் ஆங்காங்கே பெரிய அளவிலான ஆபத்தான குழிகள் தோண்டப்பட்டுள்ளதால், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வழமை போல் அங்கு சென்று தமது அன்றாடப் பணிகளை முன்னெடுக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குப் பிரதான நீர் ஆதாரமாக விளங்கும் கெசல்கமு ஓயாவுக்கு அருகில் உள்ள போர்ட்ரீ தோட்டப் பகுதியிலும், 200-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுதிரண்டு இச்சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு மிக அருகில் நடைபெறும் இந்த அகழ்வினால் நீர் மாசடைவதுடன், நீர்த்தேக்கத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியிலேயே இந்தச் சட்டவிரோத அகழ்வுகள் நீண்டநாட்களாக இடம்பெற்று வருகின்ற போதிலும், இதில் ஈடுபடுபவர்களுக்குச் சில பொலிஸ் அதிகாரிகளின் மறைமுக ஆதரவும், ஆசீர்வாதமும் இருப்பதாகப் பிரதேச மக்களால் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான பண்டார ராஜநாயக்கவிடம் வினவியபோது, சந்தேகநபர்களைக் கைது செய்ய தாம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், அகழ்வு இடம்பெறும் இடங்கள் வரை சட்டவிரோதக் கும்பலினர் தமது ஒற்றர்களை (காவலாளிகளை) நிறுத்திவைத்துள்ளதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் சில அதிகாரிகளின் ஆதரவு இவர்களுக்குக் கிடைப்பதால், பொலிஸார் புறப்படும் தகவல்கள் முன்கூட்டியே கசிந்து விடுகின்றன என்றும், இதனால் இவர்களைக் கைது செய்வது பெரும் சவாலான காரியமாக உள்ளதென்றும் அவர் அதிர்ச்சித் தகவலை ஒப்புக்கொண்டார்.
இந்தச் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பொலிஸாரின் பின்னணி குறித்து ஹட்டன் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரதீப் வீரசேகரவிடம் வினவியபோது, அவர் விசேட அதிரடி அறிவிப்பொன்றை விடுத்தார்.
நோர்வூட் பொலிஸாரைத் தவிர்ந்து, ஹட்டன் வலய ஊழல் தடுப்புப் பிரிவினரை (Anti-Corruption Unit) நேரடியாகக் களமிறக்கி, சம்பந்தப்பட்ட இரத்தினக்கல் கடத்தல் கும்பல் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் நபர்களைக் கைது செய்ய விசேட அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். மேலும், இந்தச் சட்டவிரோத கும்பல் தொடர்பான துல்லியமான தகவல்களைத் தமக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு அப்பகுதி மக்களிடம் அவர் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
