இலங்கையில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலையை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இது குறித்த முக்கிய அறிவிப்பை நேற்றைய தினம் (17) ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் (NATA Act) கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் முதலாவது அட்டவணையின் பிரகாரம், நாட்டில் புகையற்ற புகையிலைத் தயாரிப்புகளை (Smokeless Tobacco) விற்பனை செய்வது ஏற்கனவே முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தடை உத்தரவு குறித்துப் பேசிய பதில் தலைவர், “இது வெற்றிலை விற்பனையாளர்களை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமல்ல. மாறாக, இந்நாட்டு மக்களைக் கொடிய வாய் புற்றுநோய் நோயிலிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது” என்று வலியுறுத்தினார்.
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 1,750 முதல் 1,900 வரையிலான எண்ணிக்கையிலான புதிய வாய் புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தச் சட்டத்தை மீண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் கலாசாரப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, இதுவரை இச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தாது, விழிப்புணர்வை மட்டுமே வழங்கி வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், சட்டத்தை அமுல்படுத்தப் பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதால், இனிவரும் காலங்களில் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, வெற்றிலை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தச் சட்டத்தைப் புரிந்துகொண்டு, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.
