ருமேஷ் தரங்கவின் சாதனையை பாராளுமன்றத்தில் பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
இன்றைய (05) பாராளுமன்ற அமர்வின்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் ஈட்டியெறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச்சாதனையைப்பாராட்டி உரையாற்றினார்.
அவர் தனதுரையின் தொடக்கத்தில், ஈட்டியெறிதல் போட்டியில் இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க 89.75 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இது நீரஜ் சோப்ராவின் சாதனைத்தூரத்தை விடவும் 4 மீட்டருக்கும் அதிகமான தூரமாகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த அசத்தலான முன்னேற்றம், வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் டங்கன் வைட் மற்றும் சுசந்திகா ஜெயசிங்கவிற்குப்பிறகு நாட்டிற்காக ஒரு பதக்கத்தை வென்று தரும் பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ள ருமேஷ் தரங்கவிற்கும் அவரது பயிற்சியாளர்களுக்கும் அவரை உருவாக்கிய புனித பீட்டர் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் அவர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
(விருட்ச வேந்தன்)
