ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது விழா 2026
இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான இலக்கியப் படைப்புக்களால் வளப்படுத்திய இலக்கியவாதிகளை கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய குழு ஆகியவை இணைந்து 67 ஆவது முறையாக அரச இலக்கிய விருது விழாவை ஏற்பாடு செய்ததுடன், 2025 ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குத் தமது சிறந்த படைப்புகளினால் ஆற்றிய சேவையைப் பாராட்டி, 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றிய சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூல மூன்று இலக்கியப் படைப்பாளிகளுக்கு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகின்ற “சாஹித்யரத்ன” கெளரவ விருதுகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. சிங்கள மொழிப் பிரிவுக்காகப் பராக்கிரம கொடித்துவக்கு அவர்களும், தமிழ் மொழிப் பிரிவுக்காகக் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் அவர்களும், ஆங்கில மொழிப் பிரிவுக்காகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகா அவர்களும் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
2026 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்குரிய நூற்தொகுதி, நினைவுமலர் மற்றும் சிங்கள, தமிழ், ஆங்கில ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட 2026 இலக்கிய இதழும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடிந்ததுடன், கடந்த இரு ஆண்டுகள் சமூக மாற்றத்திற்கான காலமாகும் என்று இங்கு கருத்துத் தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி குறிப்பிட்டார். நாகரிக ரீதியான மாற்றம் மற்றும் முதலீடாகவும் விளங்கும் அத்தகைய சமூக மாற்றத்திற்காக, கலை மற்றும் கலாசாரத் துறை வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என்றும் குறிப்பிட்ட அமைச்சர், அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையில் பல வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும், நீண்டகாலத் தேவையாக இருந்த சமகாலக் கலையின் மேம்பாட்டுக்காக தேசிய நிதி ஒதுக்கீடு ஒன்றைத் உருவாக்கிக் கொள்ளல், தொலைதூரக் கிராமங்களில் வசிக்கும் கலை ஆர்வம் கொண்ட மக்களுக்காகப் கலாசார மையங்களின் வசதிகளை மேம்படுத்துதல், இலங்கை கலைக் கழகச் சட்டத் திருத்தம் உள்ளிட்ட அமைச்சின் கீழ் மேலும் 05 சட்டங்களைத் திருத்துதல் அல்லது புதிதாக வகுத்தல் அவற்றுள் முன்னுரிமை பெறுவதாகவும், இந்நாட்டின் கலை, கலாசாரத் துறையை தடைகளின்றி நவீன தேவைகளுக்கு பொருத்தமாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அது அவசியமானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடிந்தது. கடந்த இரண்டு வருடங்களை சமூக மாற்றத்திற்கான இரு ஆண்டுகளாகவே நாம் கருதுகிறோம். அத்துடன், அச்சமூக மாற்றத்தை ஒரு நாகரிக மாற்றமாகவும் முதலீடாகவும் நாம் பார்க்கிறோம். அதற்காக கலை, கலாசாரத் துறை வழங்கிய பங்களிப்பு அளப்பரியது.
உன்னதமான கலாசார வாழ்க்கை – ஒத்துணர்வுடைய மக்கள் என்பதே எமது கலை, கலாசாரக் கொள்கையாகும். அதன்போது இலங்கை கலைக் கழகமும் அதன் கீழ் செயற்படும் 09 உப கழகங்களும் பாரிய பணிகளை முன்னெடுக்கின்றன.
இன்றைய தினம் மூன்று சிரேஷ்ட இலக்கியவாதிகள் “சாஹித்ய ரத்ன” விருதினால் கௌரவிக்கப்பட்டமை நம் அனைவருக்கும் மாபெரும் பெருமையாகும். மகா கவிஞர் பராக்கிரம கொடித்துவக்கு 1973 இல் “பொடி மல்லியெ” கவிதைத் தொகுப்பை இயற்றினார். அன்று முதல் 2026 வரை “சந்த எளியெஹி வரதக் நெஹெ” எனும் புதிய கவிதைத் தொகுப்பு வரை இலங்கைக் கலைதுறைக்காக அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அத்துடன் ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் வழிகாட்டியாகவும் அவர் ஆற்றிய சேவையை மறக்க முடியாது.
விருது பெற்ற பேராசிரியர் ஈ.ஏ. காமினி பொன்சேகா அவர்களுடன் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் தனது முழு வாழ்வையும் ஆங்கில மொழியையும் ஆங்கில இலக்கியத்தையும் கற்பிப்பதற்கே அர்ப்பணித்தார். அத்துடன் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் அவர்கள் யாழ் விருது, சிவ தமிழ் விருது, யாழ் முத்து விருது போன்ற பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நீண்டகாலத் தேவையாகவிருந்த சமகாலக் கலையின் மேம்பாட்டிற்காக தேசிய நிதி ஒதுக்கீடு ஒன்றைத் உருவாக்கிக்கொள்ள முடிந்தமை அதில் குறிப்பிடத்தக்கது. அத்துடன், அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, இலக்கியத் துறைக்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 50 மில்லியன் ரூபாவை ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். பல்லின கலாசார மையங்களுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது. தூர பிரதேசங்களில் வசிக்கும் கலை ஆர்வம் கொண்ட மக்களுக்காகவே அந்த நிதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு ஆகும்.
இலங்கை கலைக் கழகச் சட்டம் திருத்தப்பட்டு, தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, எமது அமைச்சின் கீழ் மேலும் 05 சட்டங்கள் திருத்தப்பட்டு வருகின்றன அல்லது புதிதாகத் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் துறைகளை தடைகளின்றி நவீன தேவைகளுக்கு பொருத்தமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது மிக அவசியமாகும். மேலும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒஸ்கார் விருதுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதில் திரைப்படக் கூட்டுத்தாபனம் வெற்றியடைந்துள்ளது. இந்தச் சிறப்பான வெற்றிகளுடன் எமது கலை, கலாசாரத் துறை தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்கிறது.
இன்று அரச விருதுகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து இலக்கியவாதிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி, இலங்கை கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி வெலிசரகே, தேசிய இலக்கிய உப கழகத்தின் தலைவர் கமல் பெரேரா ஆகியோருடன், நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-09-08
