சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக உயர்மட்ட நடவடிக்கை தேவை: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார் சாணக்கியன்..
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால் பேஸ்புக் கருத்தொன்றுடன் தொடர்புடைய வழக்கில் அனோஜனுக்கு முன்னர் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிவித்திருந்த போதிலும், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்ற சட்ட ஆலோசனையில் மேல்முறையீடு மூலம் தண்டனையைக் குறைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என மதிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்தனர். இதற்காக சட்டச் செலவுகளுக்காகக் கோரப்பட்ட 1,890,766 ரூபாய் தொகையை வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கிலும் அவர்கள் செலுத்தினர்.
இந்த விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சும் இலங்கைத் தூதரகமும் நடந்து கொண்ட முறை குறித்து பல தீவிரமான சந்தேகங்கள் எழுந்துள்ளதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்:
தூதரகத்தின் சட்ட ஆலோசனையிலேயே மேல்முறையீட்டின் வெற்றிவாய்ப்பு மிகவும் குறைவு எனக் குறிப்பிடப்பட்டிருந்தும், குடும்பத்தினருக்கு ஏன் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது?
* மேல்முறையீட்டு ஆவணத்தில் அட்டர்னி அட்லான் அப்துல்லா அல்-சுபை என்பவர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நீதிமன்றத்தில் வேறொரு சட்டத்தரணியே முன்னிலையாகியுள்ளார். அந்த சட்டத்தரணியை யார் நியமித்தது? அவரது விபரங்கள் குடும்பத்தினருக்கு ஏன் வழங்கப்படவில்லை?
* குடும்பத்தினர் செலுத்திய ரூ. 1,890,766 சட்டக் கட்டணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?
* அமைச்சின் ஊடாகக் கோரப்பட்ட ஆவணங்களுக்கும் கடிதத் திகதிகளுக்கும் உள்ள காலதாமதத்திற்கான காரணம் என்ன?
அவசரமான உயிர்காக்கும் நடவடிக்கைகள் அவசியம்:
பொறுப்புக்கூறல் மற்றும் அமைச்சின் செயற்பாடுகள் குறித்த கேள்விகள் எவ்வாறாயினும், தற்போது அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதே முதன்மையான முன்னுரிமையாகும் என சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
செப்டம்பர் 17 அன்று வெளியான தகவல்களின்படி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகக் கூறப்படுவதால், சவுதி அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ தீர்ப்புப் பிரதியைப் பெற்றுக்கொள்வதுடன், சவுதி சட்ட நடைமுறைகளை அறிந்த அனுபவமிக்க சுயாதீன சட்டத்தரணியின் உதவியை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். மேலும், மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்புப் பெறும் முயற்சிகளையும், வெளிவிவகார அமைச்சர் நேரடியாகச் சவுதி சகாவுடன் பேசி உயர்மட்டத் தலையீடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் ஆபத்தில் உள்ள இந்தச் சூழ்நிலையில், சட்ட, இராஜதந்திர மற்றும் மனிதாபிமான வழிகனை முழுமையாகப் பயன்படுத்தி அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
