லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 24 ம் கட்டை சுவிண்டன் பகுதியில் அமைந்துள்ள கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் கதவை உடைத்து ஆலயத்தின் உள்ளே இருந்த உண்டியல் பெட்டியில் இருந்த பணத்தையும் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 தங்க பொட்டுகளையும் திருடியுள்ளதாக ஆலய பரிபாலன சபையினரால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது லுணுகலை பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஆலய காவலாளி சம்பந்தமாக புலன் விசாரணையில் ஈடுபட்டனர்.
பின்னர் பதுளை தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து கியா எனும் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. இதன்போது ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மோப்ப நாய் கியா ஆலயத்தில் உடைக்கப்பட்ட இடத்தை மோப்பம் பிடித்து பின்னர் ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றினுள் நுழைந்ததாகவும் பின்னர் குறிப்பிட்ட வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டினுள் இருந்து சில்லறை காசுகளும் 2 தங்க பொட்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் இருந்த ஆலய காவலாளியான 53 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
