கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான பெண்ணொருவரைத் தாக்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணும் அவரது கணவர், பிள்ளையுடன் ரயிலில் ஏறியுள்ளனர்.
பின்னர் குறித்த பெண், தனது கையடக்க தொலைபேசி ஊடாக இயற்கை காட்சிகளை வீடியோ பதிவு செய்து கொண்டு சென்ற போது,அத்தொலைபேசியை அபகரிக்கும் நோக்குடன் ரயில் பாதைக்கு அருகில் நின்றிருந்த மூவர் தடியால் அப்பெண்ணைத் தாக்கியுள்ளனர்.
நாவலப்பிட்டி மற்றும் இங்குருஓயா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் சந்தேகநபர்கள் குறித்த பெண்ணை தாக்குவதையும் அப்பெண் வீடியோ செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் போதைப் பொருளுக்கு அடிமையான 22 மற்றும் 24 வயதானவர்கள் என்றும் இவர்கள் இங்குருஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
