மலையக மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அந்தனி ஜீவா காலமானார்.
தனது 81 ஆவது வயதிலே இவ்வாறு காலமானார்.
அந்தனி ஜீவா (26 மே 1944 – 10 சனவரி 2025) இலங்கை, மலையக எழுத்தாளர்களில் ஒருவர். இதழியல், நாடகத் துறைகளிலும் பங்களித்து வந்தவர். கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர். மலையக எழுத்துக்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளிலும் பங்களித்தவர்.[1] இவர் தனது அனுபவங்களை ஜீவநதி என்ற சிற்றிதழில் ஒரு வானம்பாடியின் கதை என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார்.
அந்தனி ஜீவா கொழும்பைப் பிறப்பிடமாகவும் மலையகத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர். செபஸ்டியன், இலட்சுமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். கொழும்பு சுவர்ண வீதியிலிருந்த தமிழ்ப் பாடசாலையிலும் பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்றார். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்புளோமா பட்டம் பெற்றுள்ளார். தினபதி, செய்தி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
1960 இல் எழுதத் தொடக்கிய இவர் கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். கொழுந்து, குன்றின் குரல், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் வெளியிட்ட ஜனசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
இவர் எழுதிய முதல் நாடகமான ‘முள்ளில் ரோஜா’ 1970 இல் மேடையேறியது. 1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார். இவற்றில் வீணை அழுகின்றது என்ற நாடகத்திற்கு இலங்கை அரசு தடை விதித்தது. 1980களில் தெரு நாடகங்களைக் கொழும்பு, மலையகப் பகுதிகளில் நடாத்தினார்.
