- உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.
பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான பிரச்சினை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பான பிரச்சினை என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தமது தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
குறித்த நிராகரிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், நிராகரிப்புக்கு உள்ளான வேட்பு மனுக்கள் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தரப்பினர் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பான தீர்ப்பும் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
