வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை ஈரான் தடுத்துள்ளமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே அண்மையில் இரண்டு வார கால போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது. எனினும், இந்த போர் நிறுத்த காலப்பகுதியில் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஈரான், அதற்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எரிபொருள் கப்பல் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளதுடன், அந்த கடல் பகுதியையும் மூடியுள்ளது.
ட்ரம்ப் வெளியிட்ட கருத்து: ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ருத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்காமல் ஈரான் மிக மோசமான ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறது. சில தரப்பினர் இதனை ஒரு ‘கௌரவமற்ற செயல்’ என்று கூட அழைக்கக்கூடும். நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் இதுவல்ல.”
என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஈரானின் இந்த பிடிவாதமான போக்கினால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் பதற்றம் உருவாகியுள்ளதுடன், அமெரிக்கா அடுத்தகட்டமாக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.
