தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெரிய வெங்காயம் (பம்பாய் வெங்காயம்) மற்றும் மறக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோரும் வர்த்தகர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதேச மக்கள்,
“கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறிகளின் விலைகள், தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கடந்த நாட்களில் 160 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, தற்போது 280 முதல் 320 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அத்துடன், மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளதால், அன்றாட உணவைத் தயாரிப்பதில் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
இவ்விடயம் குறித்து மலையகத்தின் முக்கிய வர்த்தகர்கள் சிலரிடம் வினவியபோது, “தற்போது நிலவும் மோசமான வானிலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாக, கொழும்பு மற்றும் ஏனைய மொத்த வியாபார சந்தைகளில் பெரிய வெங்காயம், மலக்கறிகளின் மொத்த விலைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே உள்ளூர் சந்தைகளிலும் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டனர்.
இவ்வாறான திடீர் விலை ஏற்றத்தினால் நுகர்வோர் மட்டுமன்றி, தங்களது வியாபார நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், தாங்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வர்த்தகர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
