வெளிமடை அம்மன் புரம் பகுதியில் குளவிக்கொட்டு தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் பகி பாலசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (09)மாலைநேரத்தில் வெளிமடை, அம்மன் புரம் பிரிவில் இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், பதுளை மாவட்டத்தின் பல தோட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஏற்கனவே பல்வேறு சிரமங்களுக்கிடையில் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து வருவதாகவும், தற்போது வன ஜீவராசிகளால் ஏற்படும் அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பதுளை மாவட்ட வன ஜீவராசிகள் பிராந்திய திணைக்களம் உடனடி மற்றும் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடராஜா மலர்வேந்தன்

