தெல்தெனிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் பிசியோதெரபிஸ்டின் மரணம் தொடர்பான விசாரணைகளில், பிரதான சந்தேகநபரான காதலன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான காதலன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும், அடையாளத்தை மாற்றிக் கொண்டு வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்தில் பயணிப்பதாக காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜி.பி.எஸ் (GPS) தொழில்நுட்ப உதவியுடன் பேருந்தை இடைமறித்த வலான ஊழல் தடுப்புப் படையணி மற்றும் யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இன்று (24) காலை அவர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்தனர்.
இதற்கிடையில், தலைமறைவாக இருந்த சந்தேகநபர்களுக்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லேகலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபரே, சந்தேகநபர்கள் தப்பிச் செல்வதற்குத் துணை புரிந்ததாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தற்போது காவல்துறையினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
