வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் கராகஸுக்கு அருகில் இன்று (25) இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதன் தாக்கம் அண்டை நாடான கொலம்பியா மற்றும் பிரேசில் வரை உணரப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்களின்படி, முதல் நிலநடுக்கம் மொண்டல்பான் பகுதியிலிருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவாகப் பதிவாகியுள்ளது.
இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், வெறும் சில விநாடிகளிலேயே தலைநகரை உலுக்கும் வகையில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. வெனிசுலா வரலாற்றில் ஒரு நூற்றாண்டில் பதிவான மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
நிலநடுக்கத்தின் வீரியம் காரணமாக தலைநகர் கராகஸ் (Caracas) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன.
கட்டிடங்கள் குலுங்கியதைத் தொடர்ந்து, உள்ளே இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அலறியடித்தபடி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த இரு அடுத்தடுத்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, வெனிசுலா கடலோரப் பகுதிகள் மற்றும் அதற்கு அருகாமையிலுள்ள கரீபியன் தீவுகளுக்கு அவசர சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயரக்கூடும் என்பதால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
