அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைகளுக்காகத் தனது கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை (Passwords) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமக்கு எதிரான விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்குமாறும், தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறும் கோரி சுரேஷ் சலே அண்மையில் உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.
தொடர் போராட்டம் காரணமாக அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்ததை அடுத்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அவருக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டது.
மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சுரேஷ் சலே உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது வரை வைத்தியசாலையின் இதய நோய் பிரிவில் (Cardiology Unit) சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், இன்று (01) நீதிமன்ற உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு அமைவாக, அவர் மேற்கொண்டு வந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
