கம்பொல: கம்பொல பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் வளாகத்தில், கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது, நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அறை ஒன்று கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாடசாலையின் அதிபர் கம்பொல பொலிஸாரிடமும், வலயக் கல்வி அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பாடசாலை மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் அண்மையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது, பாடசாலை சிற்றுண்டிசாலையின் (Canteen) கழிவுநீரை வெளியேற்றுவதற்காக மைதானத்தின் ஒரு பகுதியில் நிலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சுமார் ஒன்றரை முதல் இரண்டு அடி ஆழம் வரை தோண்டியபோது, நிலத்தடியில் கான்கிரீட் சிலாப் (Concrete slab) ஒன்று தென்பட்டுள்ளது. இதனை ஒரு பழைய கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பின் ஒரு பகுதி எனத் தவறாகக் கருதிய பணியாளர்கள், அதனைத் துளையிட்டு கழிவுநீர் குழாயைப் பொருத்தியுள்ளனர்.
இருப்பினும், குழாய் பொருத்தப்பட்ட சிறிது நேரத்தில் பாடசாலையின் எல்லைக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் திடீரென பாடசாலைக்குள் வந்து முறையிட்டபோதுதான் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.
“அந்த நிலத்தடி கட்டிடம் எனக்குச் சொந்தமானது; இப்போது நீங்கள் பொருத்திய குழாய் மூலம் வரும் கழிவுநீர் நேரடியாக எனது நிலத்தடி அறையின் மின்விசிறிக்கு (Ceiling Fan) அருகில் விழுகிறது” என்று அந்தப் பெண் முறையிட்டுள்ளார்.
பாடசாலை மைதானத்தின் நிலத்திற்கு அடியில் இவ்வாறான பிரம்மாண்ட அறை ஒன்று இரகசியமாக இயங்கி வந்தமை மற்றும் அதன் மீது கழிவுநீர் குழாய் பொருத்தப்பட்ட சம்பவம் குறித்து தற்போது கம்பொல பொலிஸாரும் கல்வி அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
