பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது அல்லது அதிகரிப்பது தொடர்பாகக் கிடைத்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மீரிகம வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரகக் கற்களை அகற்றும் சிகிச்சை பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தங்களால் மேலும் சில காலம் திறம்பட சேவை ஆற்ற முடியும் எனத் தெரிவித்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் அரச அதிகாரிகள் இந்த ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளனர் என்றார்.
இவ்விடயம் குறித்து விரிவாக விளக்கிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ஏற்கனவே பலதரப்பட்ட தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதித்துறை அதிகாரிகள் மட்டுமன்றி, சுகாதார சேவையில் உள்ள சில முக்கிய தொழில் வல்லுநர்களிடமிருந்தும் இந்தக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் இதர சில துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் தங்களின் சேவைக்காலத்தை நீடிக்குமாறு கோரியுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது அல்லது மாற்றுவது என்ற யோசனைக்குச் சில தரப்பினர் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், எனினும் ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில், முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கோரிக்கைகளின் நியாயத்தன்மை குறித்தும் அரசாங்கம் தற்போது ஆழமாகப் பரிசீலித்து வருவதாகவும், அதற்கு இணங்க தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
