சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை (Civil Security Force) வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு இணையாக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கண்டனப் போராட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணிப்பாளர் நாயகம் தன்னிச்சையாகச் செயற்படுகிறார்: தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக பீரிஸ் தெரிவித்ததாவது:
“வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மிகவும் தன்னிச்சையான முறையில் இந்த நியமனங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறார். இந்த நியமனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இதில் உள்ள குறைபாடுகள் மற்றும் தற்போது கடமையாற்றும் அதிகாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எங்களுடன் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியிருந்தோம்.
எனினும், எவ்வித கலந்துரையாடலும் இன்றி தன்னிச்சையாக இந்த தவறான நியமன முறைமை முன்னெடுக்கப்படுகிறது. இதனால் எமது கள உதவியாளர்கள், இரண்டாம் நிலை அதிகாரிகள், வனவிலங்கு கட்டுப்பாட்டாளர்கள், பிராந்திய உதவியாளர்கள் மற்றும் பிராந்திய காப்பாளர்கள் உள்ளிட்ட திணைக்களத்திலுள்ள அனைத்து அதிகாரிகளும் பாரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்விடயம் குறித்துப் பேசுவதற்கு 13 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு ஒரு கலந்துரையாடலை வழங்குமாறு கோரியும், பணிப்பாளர் நாயகம் அதற்கு இடமளிக்கவில்லை. இந்தத் தன்னிச்சையான போக்கின் காரணமாகவே இன்று பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என அவர் வலியுறுத்தினார்.
தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் போராட்டம் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்கவிடம் ‘அத தெரண’ வினவியது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்று இன்று (13) வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் திணைக்களத்திற்குள் உள்வாங்குவது தொடர்பான இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்காகச் சுற்றாடல் அமைச்சினால் ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க மேலும் தெரிவித்தார்.
