கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய கடுமையான விமர்சனங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் அனைவரும் பொலிஸ் பாதுகாப்புடன் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளனர். இதனால் எவ்வித முடிவுகளுமின்றி கூட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) காலை இந்த முக்கிய அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பல உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு முக்கிய துறைகள் குறித்து ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விவசாயத் துறை தொடர்பான விரிவான கலந்துரையாடல் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விவசாயச் செய்கையில் பெருமளவிலான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
குறித்த முறைகேடு தொடர்பாகக் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கூட்ட மண்டபத்தில் பெரும் அமைதியின்மையும் தர்க்கமும் ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் இந்த அதிரடி மற்றும் கடுமையான விமர்சனப் போக்கினால் அதிருப்தியடைந்த அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக கூட்டத்தைப் புறக்கணித்து, பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
அதிகாரிகள் அனைவரும் பாதியிலேயே வெளியேறியதை அடுத்து, எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாமல் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாதியிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
