8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட யுனிக்விவ் கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் கடந்த எட்டு மாதங்களாக நுவரெலியா மாநகரசபையின் உள்ளக அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி, அவர்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடுகள் 35 குடும்பங்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை அவர்கள் இங்கு தங்குவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தலைமையில் நடைபெற்றது. இதில் நுவரெலியா பிரதேச செயலாளர், நுவரெலியா மாநகரசபை முதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், இத்திட்டத்தை முன்னெடுத்த இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை, மாநகரசபை ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நானுஓயா நகரப் பகுதியில் நிரந்தர வீடுகளை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்படும் வரை இந்த தற்காலிக குடியிருப்புகளில் பாதுகாப்பாக தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த வேலை திட்டத்திற்கு ஒரு வீட்டிற்கு சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதி அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த இடத்தில் நீர் வசதி மற்றும் சுகாதார கட்டமைப்புகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
