அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிக்கு சுயாதீனமான விசாரணைகள் அவசியம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகத்தினூடாக வரிய குடும்பங்களுக்கு வழங்கிய அஸ்வெசும கொடுப்பனவில் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்த அரச உத்தியோகத்தர்கள் சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் இன்னும் சில அரச உத்தியோகத்தர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அஸ்வெசும, சமூர்த்தி போன்ற கொடுப்பனவுகள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகின்ற ஒரு மானிய கொடுப்பனவாக காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் தித்வா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கொடுப்பனவும் பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்படுகின்றது. அஸ்வெசும, சமூர்த்தி, டித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு ஆகியவற்றில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விசாரணைகள் சுயாதீனமானதாகவும் நடுநிலையானதாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அப்பாவி மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு பயனாளிகளை தேர்வு செய்வதிலிருந்து கொடுப்பனவு பெறும்வரை அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதனை நோர்வூட், தலவாக்கலை சம்பவங்கள் சம்பவம் ஊர்ஜிதப்படுத்துகின்றன. ஏனைய பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான முறைக்கேடுகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பும் உள்ளது.
எனவே விசாரணைகள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கின்ற அதேவேளை ஊழல் மோசடி இடம் பெற்றவர்களுக்கான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
