நாட்டில் சிறுவர்களைக் கைவிடுதல், அவர்களை உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பாகக் கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு தொடர்பாக மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் தமக்குக் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், குறிப்பாக பெற்றோருக்கு எதிராகச் சட்டம் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனச் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தண்டனைச் சட்டக்கோவையின் பிரகாரம், சிறுவர்களைக் கைவிடுதல் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு 2 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 10 ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
