*சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*
ஒவ்வொருவரினதும் ஊர்களிலும் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற பொழுது, சிறைக்கூடத்திற்கு செல்கின்ற கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நமது பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ள மனிதனாக உருவாகுவதற்கு அறநெறி பாடசாலைகளின் பங்களிப்பு அளப்பறியது என்றார்.
இந்து சமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் நிகழ்வு- 2025 நிகழ்வு இன்று (2026.08.16) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
“உண்மையிலேயே மனிதன் மனிதனாகவும், விழுமிய பண்புகளுடனும், சமூகத்திலே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பிரஜையாகவும் வளர்வதற்கு இந்த அறநெறி கல்வி இன்றியமையாததாக காணப்படுகிறது.“
.“ஒழுக்கமுள்ளவனாகவும், இந்த சமூகத்திற்கு சேவை செய்யக்கூடியவனாகவும், ஒரு மனிதநேயமிக்கதாகவும் இருப்பதற்கு அறநெறி கல்வி முக்கியமானதாகக் கருதப்படுவதால் பெற்றோருக்கு இருக்கும் தலையாய கடமைகளில் ஒன்று, தமது பிள்ளைகளை அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதாகும்.
அதேபோலத்தான் இந்த அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள், உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அவர்களுக்கு பெரிய கொடுப்பனவு ஒன்றும் கிடையாது. எனினும் அவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும், அவர்களுடைய ஏனைய வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அவர்கள் இந்த அறநெறி கல்வியை போதிப்பது சாதாரண ஆசிரியர் என்று கூற முடியாது. இவர்கள் இந்த சமூகத்தை செதுக்குகின்ற சிற்பிகள் என்றார்.
எமது சமயத்தை வளர்க்க வேண்டும் என்றால், எங்களுடைய சமயத்தினுடைய தொன்மை, உண்மை தன்மையை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வது மிக மிக அவசியம். அதற்காக இந்த அறநெறி கல்வியை நாங்கள் வலுப்படுத்த வேண்டும்.
அதேப்போல இந்து மக்களை வழிநடத்துகின்ற, நேர்மையான தலைமைத்துவம் உருவாவது காலத்தின் கட்டாயம். யாரும் எங்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் அளவுக்கு நாங்கள் வந்துவிடக் கூடாது.
இதற்காக முழு இலங்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமைப் பீடம் உருவாக வேண்டும். தான் அதற்கு ஒரு திறந்த அழைப்பினை மேற்கொள்கிறேன் என்றார்.
எல்லோரும் ஒற்றுமையாகப் பயணிக்கின்ற பொழுதுதான் நாங்கள் எங்களுடைய மதத்தினுடைய தொன்மையை பாதுகாக்க முடியும். இல்லையென்றால், எல்லாவற்றிலும் இருந்து மறைந்து விடுவோம் என்றார்.
