நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசேட கணக்காய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலக அலுவலகங்களிலும், 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இந்தத் கணக்காய்வுக்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக, நோர்வுட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் ‘அஸ்வெசும’ நலன்புரிப் பயனாளர் கொடுப்பனவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனர்த்த நிவாரணக் கொடுப்பனவுகள் உரிய முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குச் சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் இக்குழு தீவிரமாக ஆராயவுள்ளது.
இது தவிர, சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் சிரேஷ்ட குடிமக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானியங்கள் தகுதியான உண்மையான பயனாளர்களைச் சென்றுடைந்துள்ளனவா என்பது தொடர்பாகவும் தணிக்கை செய்யப்படவுள்ளது.
எனவே, இந்தத் தணிக்கைப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், இது தொடர்பான முறைகேடுகள் குறித்த தகவல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாகத் தனக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
