முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் புதிய சட்டபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை பழைய கட்டண முறையே தொடரும் என மேல் மாகாண முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையிடம் இனி விலை குறித்த கோரிக்கைகளை விடுக்க முடியாது என்பதால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாகவே இதற்கான அனுமதிகள் கோரப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலை குறித்து மேலும் கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள், ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய அனுமதிகள் பெறப்பட்டு, இறுதி கையொப்பங்கள் இடப்பட்ட பின்னரே புதிய விலைகள் சட்டமாக மாறும் எனத் சுட்டிக்காட்டினர்.
எனினும், பொது வீதிகளில் தற்போதும் முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற பழைய வரம்பிற்குள்ளேயே கட்டணங்கள் அறவிடப்பட வேண்டும் என்றாலும், நடைமுறையில் 110 மற்றும் 120 ரூபாய் என்ற அடிப்படையிலேயே கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நடைமுறை முறைமைக்கான சட்டபூர்வ அனுமதிகள் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதுவரை பழைய விலைகளுக்கே பயணங்களை மேற்கொள்ளுமாரு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
