மலையகப் பகுதிகளில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வனப்பகுதிகளின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வனவிலங்குகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி அதிகரித்துள்ளது. குறிப்பாக, தோட்டப்புற மக்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகள் விலங்குகளின் நடமாட்டத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
அந்த வகையில், திரேசியா மற்றும் சிங்காரவத்தை ஆகிய மலைப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் தீவிரமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தேயிலைத் தோட்டங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அருகில் சிறுத்தைகள் உலாவி வருவதால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
அதிகாலை வேளையிலும் மாலை நேரங்களிலும் தேயிலைக் கொய்துவரும் தொழிலாளர்களும், வேலைக்குச் சென்று திரும்பும் பொதுமக்களும் பாதுகாப்புக் கருதி பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
குறிப்பாக காலை வேளையிலும், மங்கிய வெளிச்சம் உள்ள மாலை மற்றும் இரவு நேரங்களிலும் தனியாக நடமாடுவதைத் தவிர்க்கவும்.
வேலைக்குச் செல்லும்போதும் அல்லது வெளியே செல்லும்போதும் தொழிலாளர்கள் குழுவாகவும், சத்தமிட்டவாறும் செல்வது பாதுகாப்பானது.
வீடுகளுக்கு அருகில் வளர்க்கப்படும் ஆடு, மாடு மற்றும் வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாப்பான இடங்களில் கட்டிப் பராமரிக்கவும்.
வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவுக் நேரங்களில் வெளிச்சமான விளக்குகளை எரியவிடவும்.
இது குறித்து உரிய வனவிலங்குப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உடனடி கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சிறுத்தைகளைக் கண்காணித்து மக்களைப் பாதுகாப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை என்றாலும், தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு கூடுதல் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது வனவிலங்கு அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
