பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஹோமகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், 2018 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இந்த பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு முரணானது என்பதால், அதனை செல்லுபடியற்றதாக கருதுவதாக உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
