நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த பல்நோக்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (13) காலை நடைபெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் ஒருங்கிணைந்த பல்நோக்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படுவதுடன், அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடமும் அபிவிருத்தி செய்து விரிவாக்கப்படவுள்ளது.
காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, குறித்த நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சருமான வைத்தியர் மதுர தஹம் பண்டார செனவிரத்ன, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி, நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசெல பெரேரா, நுவரெலியா பிரதேச செயலாளர் கலுகம்பிடிய, நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரிகள், மனிதவள அபிவிருத்தி நிலைய அதிகாரிகள், வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
93 மில்லியன் 916 ஆயிரத்து 700 ரூபாய் 10 சதம் என மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் 281 நாட்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தையும் அபிவிருத்தி செய்து விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அடிக்கல் நாட்டும் நிகழ்வைத் தொடர்ந்து, திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கருத்துப் பகிர்வு நிகழ்வும் நடைபெற்றது.
கஜரூபன் திவ்யா நுவரெலியா
