ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச்சலவை விசாரணைகளில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த விமானக் கொள்வனவு முறைகேடு தொடர்பில், பணச்சலவைச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான விபரங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளது.
இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
