கொழும்பு – மட்டக்குளி பகுதியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, சம்பவம் நடந்த சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருளை உட்கொண்டிருந்தது பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
மட்டக்குளிப் பகுதியில் நேற்றிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று, வீதியில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வீதியில் நின்றுகொண்டிருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது இக்கார மோதியுள்ளதுடன், இந்த கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன், அவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் தற்போது 10 பேர் வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் பின்னர் உடனடியாகக் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக மருத்துவ மற்றும் பொலிஸ் சோதனைகளின் போதே, அவர் கஞ்சா போதையில் வாகனம் இயக்கியமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
