உழைப்பின் பெருமிதம்!
மக்களின் அடையாளமாக விளங்கும் உழைப்பாளர் தினம். பெரும் தலைவர்களுக்கு மட்டுமே சிலையும் அவர்களுக்கு என சிறப்பான தினமும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மனிதர்களுக்கும் இந்த நாட்டையே தனது தோளில் சுமந்து நிற்கும் உழைப்பாளர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கொண்டாடப்படும் ஒரு தினம் தான் உழைப்பாளர் தினம்.

ஆண்டு தோறும் மே 01ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இவ்வாறான ஓர் தினம் எவ்வாறு உருவானது? முன்பு எல்லா மக்களும் இடைவெளி இல்லாமல் உழைத்து கொண்டே தான் இருந்தார்கள், அதனை எதிர்க்கும் விதமாக அமெரிக்காவில் எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு மற்றும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என போராட தொடங்கினார்கள். இந்த போராட்டம் 1886ஆம் ஆண்டு நடந்தது. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்டு போராடினர்.
இதில் பல உழைப்பாளர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் தொழிலாளர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து உழைப்பாளர்கள் ஒன்று திரண்டு போராடி வெற்றி கண்டனர். உழைப்பாகர்கள் ஒன்றுபட்ட தினத்தை போற்றும் விதமாகவும், தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாகவும் உலக தொழிலாளர்கள் தினம் மே 01ஆம் திகதி கொண்டாடப்படுட்டு வருகின்றது.
உழைப்பாளர்களுக்காகவே பல்வேறு உரிமைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது இவ் உரிமைகளுக்காக போராடும் நிலை இந்நூற்றாண்டிலும் நடைபெறுகின்றது. தற்காலத்திலும் உழைப்பாளர்களுக்கான உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. தொழிலாளர் சுதந்திரம், பாதுகாப்பு, உழைப்பிற்கேற்ற ஊதியம் முறையாக கிடைக்கப்படாமை, உழைப்பாளர் மகிழ்ச்சி, ஓய்வு நேரம் பரிக்கப்படுதல் போன்ற பல்வேறு உரிமை மீறல்கள் இடம் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.
மானிடர்கள் உழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் ஆனால் நாள் முழுவதும் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. “இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்குவதற்கு மனிதனின் உழைப்பு இன்றியமையாததாகும்” என்ற கருத்து நடைமுறையில் சாத்தியமாகவே இருக்கின்றது. கடின உழைப்பின் மூலம் இந்த உலகில் சாதித்து தன் வாழ்வில் முன்னோரிய பலரையும் ஒவ்வொரு துறையிலும் காணக்கூடியதாக இருப்பதுடன் கஷ்டப்பட்டு உழைத்தும் தங்களுடைய பொருளாதார நிலை உயராத மக்கள் கோடிக் கணக்கானோர் இருக்கின்றனர்.
இதற்கான காரணம் என்ன? மக்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படாமை, மக்களின் உழைப்பை சுரண்டும் வகையிலான பல கம்பனிகளின் தந்திரோபாய மூலை, ஒரு சமூகம் இப்படி தான் இருந்தது இனியும் அப்படியேதான் இருக்க வேண்டும் என்ற சிந்தனைக் கொண்ட சமூகப் பிராணிகளின் செயல், வரவிற்கு மீறிய செலவு, சேமிப்பின்மை, முறையான ஓர் திட்டமிடல் இல்லாத அனாவசிய செலவீணங்கள் போன்ற பல்வேறு காரணங்களினால் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்த நிலையிலேயே உள்ளது.
இது போலவே எமது நாட்டின் முதுகெழும்பாக செயற்படும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாக அமைவது பணப்பற்றாக்குறையே ஆகும். எமது குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மற்றும் சம்பாதிக்கும் அனைவரும் உடலை வருத்தி கஷ்டப்பட்டு உழைத்து ஓர் குறிப்பிட்டளவு ஊதியத்தையே பெற்றுக் கொள்கின்றனர்.
அந்த பணத்தில் பிள்ளைகளின் கல்வி, உணவு, உடை, போக்குவரத்து, மின்சாரக் கட்டணம், வாழ்வில் நடைபெறும் நல்ல விடயங்கள், துக்க நிகழ்வுகள் என்பவற்றிற்கு கிடைக்கின்ற குறிப்பிட்ட தொகையை கொண்டே வாழ்க்கையை நடத்த வேண்டும்.
அதாவது “ஒருவர் மாத சம்பளமாக 10,000ரூபாவைப் பெற்றாள் அதற்குள் தான் அவரின் வாழ்க்கை செலவினை பார்க்க வேண்டி வருகின்றது.”
இவ்வாறான நெருக்கடியான ஒர் சூழலில் வாழ்க்கையை நடத்தும் மக்களுக்கு மேலும் கஷ்டத்தை உருவாக்குவதற்கும் அவர்களின் இலாபத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் மக்களை இலக்காக கொண்டு தந்திரோபாயமான பல செயற்பாடுகளை செய்து வருகின்றன.
அது போலவே மதுசார கம்பனிகளும் எம்மை ஏமாற்றி உழைப்பின் ஒரு பகுதியை சூறையாடுகின்றனர். (ஆண்டு கணக்கெடுப்பின்படி ஒரு தோட்டத்தில் மட்டும் மாதாந்தம் 1,300,000ரூபா சாராயக் கம்பனிகள் சூறையாடுகின்றார்கள்.) இவ்வாறான நிலை எவ்வாறு ஏற்பட்டது என சற்று சிந்தித்து பார்ப்போம். சாராயக் கம்பனிகள் தனது உற்பத்தியை பெருக்கி கொள்வதற்காக சமூகத்தில் பல போலி மூடநம்பிக்கைகளை பரப்பியுள்ளது.
அவற்றுள் ஒன்றுதான், கஷ்டப்பட்டு உழைத்தால் ஏற்படும் உடல் கஷ்டம் சாராயம் குடித்தால் நீங்கும் என்ற அக் கருத்தின் உண்மை தன்மையை ஆராய்வோம்.
• சாராயம் குடித்த ஒரு நபரை நன்கு அவதானித்தால் அந்நபரின் உடற்களைப்பும் அசௌகரியமும் அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?
• மறுநாள் வேலைக்கு சுறுசுறுப்பாக செல்கின்றாரா?
• சாராயம் குடிக்காதோர்களுக்கு உடற்களைப்பு நீங்குவதில்லையா?
சாராயம் என்பது உடலிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் திரவமாகும், சாராயம் உடற்களைப்பையும் அசௌகரியத்தையும் அதிகரிக்கும்.
இதைத் தொடர்ந்து சாராயம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது என்ற கருத்தை நோக்குவோம்.
• ஒருவர் சாராயத்தை குடிக்கும் போது அசௌகரியத்துடன் குடிக்கின்றாரா? செயகரியத்துடன் குடிக்கின்றாரா?
• சாராயம் குடித்ததன் பின்னர் மகிழ்ச்சியாக செய்ய வேண்டிய செயற்பாடுகளை துடிப்புடன் செய்கின்றாரா? முந்தமாக கஷ்டப்பட்டு செய்கின்றாரா?
• சாராயத்திற்கு ஏமாந்து குடிப்பவரால் பிரருக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றதா? ஆசௌகரியம் ஏற்படுகின்றதா?
இது போன்ற கோள்விகள் எழுப்புவதன் மூலம் உண்மைத் தன்மையை அறிந்துக் கொள்ளலாம்.
உழைக்கும் பணத்தில் சாராயத்திற்கு ஏமாந்து குடிப்பதனால் நஷ்டங்கள் ஏற்படுகின்றதா?
• முழு நாளும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினை சாராயக் கம்பனிக்காரர்களின் மகிழ்ச்சிக்காக செலவிடுதல்.
ஒருவர் முழு நாளும் கஷ்டப்பட்டு உழைத்து 1500ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டப்பின் உடல் கஷ்டம் என்று ஒரு நாளுக்கு 780ரூபா க்கு சாராயம் குடிக்கின்றார் அவ்வாறு ஒரு வாராத்தில் நான்கு நாட்கள் குடித்தால் 3120ரூபா, ஒரு மாதத்திற்கு 9360ரூபா, ஒரு வருடத்திற்கு 37,440ரூபா அன்னளவாக வீணாக செலவிடுகின்றனர். இதன் மூலம் நன்மையடைவது யார்?
• பிள்ளைகளின், குடும்பத்தாரின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட மாட்டாது.
• குடும்பத்தினரின் மகிழ்ச்சி இல்லாமல் போகின்றது.
• சாராயம் குடித்துவிட்டு இருப்பவர்களின் வாய்நாற்றம் ஏனையோரை அசௌகரிய உணர்விற்கு ஆளாக்கின்றது.
• சாராயம் குடித்துவிட்டு சாராயத்தை காரணம் காட்டி சுயநினைவு இல்லாததைப் போல் நடித்துக் கொண்டு பொது பேருந்துகளில் பயணிக்கும் போது அதில் வேலை முடித்து வரும் பெண்கள், பாடசாலை முடித்து வரும் பிள்ளைகள் என பலரும் பல பிரச்சினைகளுக்கும், நச்சரிப்புகளுக்கும், தொல்லைகளுக்கும் ஆலாகக் கூடிய நிலை ஏற்படுகின்றது. இவ்வாறான பல நஷ்டங்கள் ஏற்படுகின்றது.
இது போன்ற நிலையினை எவ்வாறு வெற்றிக் கொள்ளலாம்?
வீணாக சாராயத்திற்கு செலவிடும் பணத்தினை சேமித்தல் அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தல்.
உடற்கஷ்டம் என்று ஏமாந்து சாராயம் குடிப்பவர்களுக்கு அது தொடர்பான உண்மைத் தன்மையை எடுத்துக் கூறல்.
பிள்ளைகள் சாராயத்திற்காக வீணாக செலவழிக்கும் பணத்தினை தந்தைக்கு கணக்கு போட்டுக் காட்டல்.
மனைவியானவள் வரவிற்கேற்ற செலவினை செய்வதுடன் சாராயம் குடிப்பதனால் ஏற்படும் நஷ்டத்தினை பட்டியல் போட்டுக் காட்டல்
உயர் அதிகாரிகள், தோட்ட தலைவர்கள், ஏனைய அதிகாரிகள் மக்களின் பொருளாதார நிறை வாழ்விற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
கட்சி கூட்டங்கள், சங்கங்கள், ஏனைய கூட்டங்களில் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் சுகவாழ்விற்காக இது போன்ற விடயங்களை உரையாடலாம்.
இவ்வாறான செயற்பாடுகளை சற்று நடைமுறைப்படுத்தி பார்க்கலாம். சுpறியவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் உபயோகப்படுத்தும் பொருள் உழைப்பினால் வந்தது தான் காலையில் சாப்பிடும் தட்டில் ஆரம்பித்து இரவு உறங்கும் கட்டில் வரை அனைத்தும் தொழிலாளர்களின் உழைப்பில் வந்தது தான். ஓவ்வொரு நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் அந்த நாட்டில் உள்ள மக்களின் உழைப்பினால் வந்தது. உழைப்பாளர்களை போற்றும் விதமாக “உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்குமில்லை” என்ற பாடலும் உள்ளது.உழைப்பு என்பது அனைவருக்கும் சமன் தான் குறைவாக சம்பளம் வாங்குபவர், அதிகமாக சம்பளம் வாக்குபவர் என்ற பிரிவினை இன்றி திருட்டு, பொய், சட்டத்திற்கு புறப்பான செயல் எதுவும் செய்யாமல் பார்க்கும் எந்த ஒரு வேலையும் உயர்வானதே! மகத்தான உழைப்பில் இருந்து பெறும் ஊதியத்தை வீணாக செலவழிக்காது முறையாக திட்டமிட்டு செலவிட முயற்சி செய்வோம்.
ஞா.த்ரிஷா