அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்கள் இன்று (2) குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுக் கொண்டிருந்த வேளையில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டினை கழுகு மோதியமையினால் குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்பட தமிழ் வித்தியாலயத்தின் ஆண் மாணவர் ஒருவரும் 05 பெண் மாணவிகளும் மற்றும் பொகவந்தலாவ ஹோலிரோஸரி தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒரு மாணவியுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் காரணமாக இன்றைய தினம் அட்டன் வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பாடசாலை மூடப்பட்டதாக எல்பட தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவத்தை அறிந்த பிரதேச மக்கள் மரத்திலிருந்த குளவி கூடுகளை தீ வைத்து அழித்தமையும் குறிப்படதக்கது.
