முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் பசறை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்
பொலிஸ்துணைப்படையில் கடமையாற்றும் படல்கும்பர பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் படல்கும்பரவில் இருந்து பதுளைக்கு பணியின் நிமித்தம் சென்று, மீண்டும் படல்கும்பர நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்து போது, பதுளை-பசறை 8 ஆம் கட்டை பகுதியில் மாலை 4 மணியளவில் தேநீர் அருந்துவதற்காக முச்சக்கரவண்டியை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
அதன்பின் தேநீர் அருந்திவிட்டு வந்து பார்த்தவேளை, முச்சக்கரவண்டி காணாமல் போயிருந்ததை அவதானித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகியிருந்த காணொளியை பார்வையிடுகையில், இருவர் வந்து குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திக்கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது.

மேலும் குறித்த முச்சக்கரவண்டி பதுளை-பசறை 10 கட்டை சந்தி யூடாக நமுனுகெல சென்று, அதன்பின் ஹிங்குருகடுவ நோக்கி பயணித்தமை தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பசறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, ஹிங்குருகடுவ பொலிஸாரின் உதவியுடன் பசறை பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதன்போது, உக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும், மொனராகல பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, திருடப்பட்ட 9 இலட்சம் பெறுமதியான YE 1058 என்ற இலக்கமுடைய முச்சக்கரவண்டியும், முச்சக்கரவண்டியினுள் இருந்து, 6500 ரூபாய் பெறுமதியான கைபேசி மற்றும் ஏடிஎம் அட்டை மீட்கப்பட்டுள்ளது.
இக்கைது நடவடிக்கையானது பசறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரட்ன தலைமையில், பொலிஸ் உத்தியோகத்தர்களான சமில, நிரஞ்சன், உபுல் ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை 29ஆயிரம் ரூபாய் பணம் முச்சக்கரவண்டியினுள் இருந்ததாகவும் அதை காணவில்லை எனவும் முச்சக்கரவண்டி உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் தாங்கள் பணம் எதனையும் முச்சக்கரவண்டியிலிருந்து எடுக்கவில்லை என கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ராமு தனராஜா
