வாழைமரங்களை வெட்டி வீசி, அச்சுறுத்திய குண்டர்கள் 2705.2023
தென் பகுதி தோட்ட தொழிலாளர்களின் வாழைமரங்களை வெட்டி வீசி, அச்சுறுத்திய குண்டர்கள்.
தெனியாய மொறவக்க பகுதியில் வாழும் மலையக தமிழர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக வளர்த்த வாழைமரங்களை, சில குண்டர்கள் வெட்டி வீசும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
மொறவக்க பெருந்தோட்ட பகுதியானது, தற்போது பௌத்த பிக்கு ஒருவரின் கட்டுப்பாட்டில் செயற்பட்டு வருவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பல நூற்றாண்டு காலமாக இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தாம், வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளை அண்மித்த பகுதிகளில் வாழைமரங்களை நட்டு, அதனூடாக வருமானத்தை பெற்று வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்;.
இவ்வாறான பின்னணியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாழை குலைகளை விற்பனை செய்ய முயற்சித்த தருணத்தில், அது தமக்கு சொந்தமானது என தோட்ட நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
குறித்த வாழைமரங்களின் அறுவடைகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமை கிடையாது என அந்த மரங்களை வளர்த்தவர்களிடம் தோட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிலர் குறித்த பகுதிக்கு வருகைத் தந்து, அங்கு வளர்ந்திருந்த அனைத்து மரங்களையும் வெட்டி வீசியுள்ளனர்.
இவ்வாறு மரங்களை வெட்டும் காணொளிகளை அந்த பகுதியிலுள்ள மக்கள் ஒளிபதிவு செய்துள்ளனர்.
வாழைமரங்கள் மாத்திரமன்றி, ஏனைய செய்கைகளையும் வெட்டியுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
எந்தவொரு செய்கையையும் இந்த பகுதியில் செய்யக்கூடாது என தமக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், தமக்கான நியாயத்தை பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மொறவக்க பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், பொலிஸார் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி -ட்ரூ சிலோன்
