டயகம சௌமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடலும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் அண்மையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் வரலாற்றைக் கொண்டுள்ள டயகம மேற்கு இலக்கம் 2 தமிழ் மகா வித்தியாலயம் என வழங்கப்பட்டு தற்போது டயகம சௌமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியாக பரிணமித்து நிற்கும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்று சேர்க்கும் முகமாக முதன் முறையாக அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய 1997 ஆம் ஆண்டு முதல் அப்பாடசாலையிலிருந்து சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவர்களையும் வகுப்பு வாரியாக ஒன்றிணைத்து மாபெரும் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் வகுப்பு வாரியாக மொத்தம் 20 அணிகள் கலந்துகொண்டன. ஒன்று கூடலை அடையாளப்படுத்தும் முகமாக டயகம நகரிலிருந்து கல்லூரி மைதானம் வரை நடை பவனியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் பின்னர் லீக்ஸ் சுற்று அடிப்படையில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்று அதில் வெற்றிபெற்று காலிறுதிக்கு பெற்ற 8 அணிகளிலிருந்து இறுதிப்போட்டிக்கு 2004 ஆம் ஆண்டு அணியும் 2012 ஆம் ஆண்டு அணியும் தகுதி பெற்றன. இதில் 2004 ஆம் ஆண்டு அணி வெற்றிபெற்று முதலாவது மாணவ ஒன்று கூடல் கிண்ணத்தை கைப்பற்றியது. 3 ஆம் இடத்தை 2015 ஆம் ஆண்டு அணி பெற்றுக்கொண்டது.
இக்கல்லூரியினால் வளர்க்கப்பட்ட சகல மாணவர்களையும் ஒன்றிணைத்து பாடசாலை சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பழைய மாணவர் சங்கத்தினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், இந்நாள் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.




