மறைந்த ரெஜி ரணதுங்க அவர்களின் 16வது நினைவு தினம் இன்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான மறைந்த ரெஜி ரணதுங்கவின் 16 வது நினைவு தினம் இன்று (30) உடுகம்பலவில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.
உடுகம்பலையில் அமைந்துள்ள ரெஜி ரணதுங்கவின் நினைவிடத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது உறவினர்கள் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி உடுகம்பலையில் பிறந்த ரெஜி ரணதுங்க, மினுவாங்கொடை நாலந்தா கல்லூரி, நீர்கொழும்பு ஹரிச்சந்திரா கல்லூரி மற்றும் கோட்டே ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றார். அவர் ருமேனிய குடியரசு பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் பட்டம் பெற்றார்.
1962ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான ரெஜி ரணதுங்க, 1989ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். 1994 தேர்தலின் பின்னர் போக்குவரத்து, சுற்றாடல் மற்றும் சுகாதார பிரதி அமைச்சராக பதவியேற்ற திரு. ரெஜி ரணதுங்க, துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சராகவும், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் சீர்திருத்தங்கள் பிரதி அமைச்சராகவும் சிவில் விமான போக்குவரத்து, உணவு மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தேசிய கைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் ரணதுங்க பணியாற்றியுள்ளார்.
நந்தனி ரணதுங்கவை மணந்த ரெஜி ரணதுங்க ஆறு பிள்ளைகளின் தந்தையாவார். தற்போதைய ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான அர்ஜுன ரணதுங்க ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
