மடுல்கலை நிருபர்
ஜனாதிபதி நிதியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து கண்டி மாவட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை (17) குண்டசாலை மஹாமெவ்னா வளாகத்தில் நடைபெற்றது.
மத்திய மாகாண ஆளுநர் திரு.லலித்.யு.கமகே தலைமையிலான இந்த வேலைத்திட்டத்தின் கீழ், முதலாம் ஆண்டு முதல் பொதுத் தராதரம் வரை கல்வி கற்கும் ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபாவும் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபாவும் புலமைப்பரிசில் கிடைக்கும்.
கண்டி மாவட்டத்தின் 06 கல்வி வலயங்களிலுள்ள 360 உயர்தர மாணவர்களுக்கும் முதலாம் தரம் முதல் பதினொன்றாம் தரம் வரையிலான 6472 மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் 4031 சிறுவர், சிறுமியர்களுக்கு நிதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அபிவிருத்தி லொத்தர் சபையின் நிதியுதவியின் கீழ், இந்த கல்விப் புலமைப்பரிசில் ஜனாதிபதி புலமைப்பரிசில் நிதியத்தினால் தொடர்ச்சியாக இரண்டு வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
