அருளளித்து அரவணைத்து ஆற்றல் தரும் எங்கள் தாயே
அசையாத மனவலிமை தந்திடவே வரவேண்டும்
தீராத துன்பங்கள் அண்டாத நிலை தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
கேட்டவரம் தந்தெமக்கு ஆற்றல் தரும் தாயே
காலமெல்லாம் உடனிருந்து துணைதரவே வரவேண்டும்
காவலாயிருந்தெமக்கு காப்பினைத் தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
கருத்தினிலே நீயிருந்து கவலைகளைப் போக்கிடவே வரவேண்டும்
கேடு செய்ய நினைப்போர் எமை அண்டா நிலை தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
நம்பி வந்து அடிதொழுவோர் நலம் காக்கும் தாயே
நெஞ்சகத்தில் உறைந்திருந்து நிம்மதியைத் தந்திடவே வரவேண்டும்
நிரந்தர நிம்மதியை என்றும் எமக்குத் தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
கல்வியகம் அருகினிலே அமர்ந்தருளும் தாயே
அறிவொளியைப் பாய்ச்சி எங்கும் ஒளிபெருக்க வரவேண்டும்
நல்லெண்ணம் கொண்டோரின் உறவு நிலை தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
வடஇலங்கை வந்தமர்ந்து வளமளிக்கும் தாயே
வற்றாத கருணையினை எமக்களிக்க வரவேண்டும்
உடல் நலமும், உளநலமும் குன்றா நிலை தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
