ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் பயணியின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய சந்தேக நபரைக் கைது செய்ய ஹட்டன் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளானவருக்கு இரத்தம் அதிகமாக வெளியேறியதன் காரணமாகக் உடனடியாக குறித்த நபர் முச்சக்கர வண்டியில் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபரின் நிலைமை மோசமாக இருந்ததால் கிளங்கன் ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர், தன்னை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய நபரை தனக்குத் தெரியாது என்றும், எதற்காகத் தாக்கினார் என்றும் தெரியவில்லை என்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த நபர் ஹட்டன், டிக்கோயா, லெதண்டி தோட்டத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் என்றும், காயமடைந்த நபர் வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
