அன்புருவாய், அருளுருவாய் அமர்ந்திருக்கும் சிவனே
ஆற்றல் தந்து வழிநடத்த வந்திடுவாய் ஐயா
துன்பங்கள் அண்டாத தூய வாழ்வைத் தருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே
ஆறுதலைத் தருவாய் அணைத்தெம்மைக் காப்பாய்
தொல்லையில்லா வாழ்வு தந்து துணையாக இருப்பாய்
நன்மைகள் பெருகிடவே நாளும் வழிதருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே
அனுராதபுரந்தனிலே இருந்தருளும் பேரருளே
அச்சமில்லா நிம்மதியைத் தந்தெம்மை வழிநடத்த வந்திடுவாய் ஐயா
நெஞ்சமதில் உறுதிதந்து நிம்மதியாய் வாழவழி தருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே
அன்னை உமையவளுடன் காட்சி தரும் சிவனே
ஆதரித்து அணைத்தெமக்கு நிம்மதியைத் தந்திடுவாய் ஐயா
உடல் நலமும், உளநலமும் உறுதிபெற வழிதருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே
எல்லாள மாமன்னன் ஆண்ட தமிழ் நிலம் உறை சிவனே
ஏற்றமிகு பெருவாழ்வை தந்தெம்மைக் காத்திடுவாய் ஐயா
பாரெங்கும் நம் பெருமை நிலைபெற வழி தருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே
அனைத்துயிர்கள் உள்ளுமாய் உறைகின்ற சிவனே
அளவில்லா பெருங்கருணை பொழிந்திடுவாய் ஐயா
இப்புவியில் தலைநிமிர்ந்து வாழ வழிதருவாய்
பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
