ஹட்டன் நகரில் இளைஞர் ஒருவரை தலையில் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய நபர், ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் உத்தரவின் பிரகாரம், ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தைச் சேர்ந்த 30 வயது குடும்பஸ்தருக்கும் வாகனம் ஒன்றில் வந்த நபருக்கும் இடையில், ஹட்டன் நகரின் அம்பிகா சந்தியில் கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அதனையடுத்தே வானத்தில் வந்த நபர், அந்த குடும்பஸ்தரை தலையிலேயே தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் கொட்டகலை பகுதியில் உணவகம் ஒன்றின் உரிமையாளர் ஆவார்.
இந்த சம்பவத்தில் தலைப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான அவர் தற்போது சுயநினைவின்றி கோமா நிலையில் டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
இவரது தலைப்பகுதியில் மேலதிக பரிசோதனைகளை நடத்துவதற்கு கண்டி வைத்தியசாலையில் சி.டி.ஸ்கேன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் ஒன்பது மாத குழந்தையொன்றின் தந்தையாவார்.
