கைக்கடிகார மின்கலத்தை (Button Battery) விழுங்கிய 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
காலி: கைக்கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ‘பட்டன்’ மின்கலத்தை (Button Battery) தெரியாமல் விழுங்கிய 7 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெலிகம, படவல பகுதியைச் சேர்ந்த நேஹான் தசங்க டி சில்வா என்ற 7 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவனாவான். இவன் தலாரம்ப இந்தசார வித்தியாலயத்தில் தரம் 3-இல் கல்வி கற்று வந்தான்.
வீட்டில் வீசப்பட்டிருந்த சிறிய மின்கலத்தை அச்சிறுவன் தெரியாமல் விழுங்கிய நிலையில், எக்ஸ்-ரே (X-Ray) பரிசோதனையின் மூலம் அது உறுதி செய்யப்பட்டது. பின்னர், மாத்தறை பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் மின்கலம் அகற்றப்பட்டது. இரண்டு நாட்கள் சிகிச்சையின் பின் சிறுவன் வீடு திரும்பிய போதிலும், அவனுக்கு முதுகு வலி மற்றும் வயிற்று வலி இருந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில், சிறுவன் திடீரென ரத்தம் வாந்தி எடுத்துள்ளான். உடனடியாக மீண்டும் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, எண்டோஸ்கோப்பி (Endoscopy) மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
கராபிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி யு.டி.ஏ. திஸாநாயக்க மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
மின்கலம் உடலில் இருந்தபோது ஏற்பட்ட பாதிப்பால், குடலின் கீழ்ப்பகுதியில் உள்ள பிரதான இரத்த நாளத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உருவான கடுமையான உட்புற இரத்தப்போக்கு காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மரண விசாரணையை வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகே மேற்கொண்டார். சிறிய மின்கலங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இந்தச் சம்பவம் எச்சரிக்கின்றது.
