ஜெனீவாவில் ஐக்கிய நாட்டு சபையின் 114 வது கூட்டத்தொடரில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்து கவனம்
ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமையகத்தில், சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களது தொழில் பாதுகாப்பு, பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் அவர்கள் கருத்துரைத்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதேவேளை, பெருந்தோட்டப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இதனையடுத்து, ஜெனீவாவில் உள்ள துருக்கி தூதரகத்தின் உயர்ஸ்தானிகருக்கும் எனக்கும் இடையிலான சந்திப்பின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன், பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்புகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்களை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைப்பதற்கும், எதிர்கால ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பாக அமைந்தன.
