பொகவந்தலாவ, செப்பல்டன் பகுதியில் சட்டவிரோதமாக கம்பி வலை விரித்து மரை ஒன்றை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்ய முற்பட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று (15) கைது செய்துள்ளனர்.
செப்பல்டன் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரை ஒன்றை, சந்தேக நபர்கள் கம்பி வலைகளைப் பயன்படுத்தி வேட்டையாடி கொன்றுள்ளனர். பின்னர், அந்த மரையின் இறைச்சியைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
எஞ்சியிருந்த சுமார் 10 கிலோ மரை இறைச்சியை, பொகவந்தலாவ நகரிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக பொலித்தீன் பைகளில் கொண்டு சென்றபோதே, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், செப்பல்டன் தோட்டத்தின் என்.சி (N.C) பிரிவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நுவன் மதுசங்க தெரிவித்தார்.
– மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்
