நாட்டில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் செயலாளரினால் விசேட சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன:பாடசாலை மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை துல்லியமாக இனங்கண்டு அவற்றை உடனடியாக அழித்தல்.அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்களின் கூட்டுப் பங்களிப்புடன் கூடிய துப்புரவாக்கல் பணிகளை முன்னெடுத்தல். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றாடலைத் தூய்மையாகப் பேணுவது குறித்து மாணவர்கள் மற்றும் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ள பின்னணியில், மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கல்வி அமைச்சு இந்த அவசர சுற்றறிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

