நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட கடுமையான அமைதியின்மை மற்றும் தர்க்க நிலைமை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று, அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றை வழங்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்க்கட்சியினரின் இந்த கோரிக்கை குறித்து, சபாநாயகர் ஆளுந்தரப்பின் நிலைப்பாட்டை வினவினார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சியினர் கோரும் அவசர விவாதத்திற்கு இணங்க முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.
மேலும், தேவை எனின் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் சபை முதல்வர் குறிப்பிட்டார்.
சபையில் அமைதியின்மை: சபை முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், சபைக்குள் கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே சபாநாயகர் சபையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
